தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
94 வயதான அவருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி, 1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷவுகாரு’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தே ‘சௌகார்’ எனும் அடைமொழி அவரது பெயருடன் இணைந்தது.
தமிழில் 1952-ல் வெளியான ‘வளையாபதி’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘பாசமலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘இரு கோடுகள்’ உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
சினிமா மட்டுமின்றி 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றுள்ள இவருக்கு, கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் வகையில் மத்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது மற்றும் ஆந்திர அரசின் ‘நந்தி’ விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அறிந்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

