உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ சம்பவங்களால், கனடாவில் தயாரிக்கப்படும் Canadair நீர்குண்டு விமானங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கல்கரி நகரை தளமாகக் கொண்டு இயங்கும் De Havilland Canada நிறுவனம், புதிய DHC-515 Canadair நீர்குண்டு விமானத்தை உருவாக்கி வருகிறது. ஏரி, ஆறு அல்லது கடலில் இருந்து மிகக் குறுகிய நேரத்தில் நீரை எடுத்துக் கொண்டு, காட்டுத்தீ பரவும் பகுதிகளில் துல்லியமாகக் கொட்டும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், குரோஷியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய DHC – 515 விமானங்களுக்கு ஏற்கனவே ஆர்டர்களை வழங்கியுள்ளன. முதல் விமானம் 2027 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டு, 2028 ஆம் ஆண்டு கிரீஸ் அரசிடம் முதல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் காட்டுத்தீ பரவும் காலம் நீண்டு வருவதுடன், ஒரே நேரத்தில் பல பிராந்தியங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதால், தீயணைப்பு விமானங்களை நாடுகளுக்கிடையே பகிர்ந்து பயன்படுத்துவது சிரமமாகி வருவதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய நீர்குண்டு விமானங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் கனேடிய விமானத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் இந்த வகையான நூற்றுக்கணக்கான விமானங்களுக்கு தேவை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் காட்டுத்தீ அச்சுறுத்தல் Canadair நீர்குண்டு விமானங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உலகளவில் உயர்த்தியுள்ளது.

