இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் மேலும் 35 முக்கிய குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றச் செயல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு 1,490 மில்லியன் ரூபாய் மற்றும் 2025 ஆம் ஆண்டு 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

