ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக, மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளது.
மாநில பாஜக தலைவர் ஆதித்யா சாஹு அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டம் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் என்றும், இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.எஸ்.எஸ்.சி (JSSC) மற்றும் ஜே.பி.எஸ்.சி (JPSC) போன்ற தேர்வு முகமைகள் மூலமாகத் தகுதியான மாணவர்களுக்கு வேலை வழங்காமல் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். பேரணி சட்டமன்றத்தை நெருங்கியபோது அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்புத் தடுப்புகளைப் போராட்டக்காரர்கள் மீற முயன்றதால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடியைப் பிரயோகித்தனர்.
காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தடியடி நடவடிக்கையைக் கண்டித்துள்ள பாஜ தலைமை, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரப் போக்கை ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

