சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய தனிப்பிரிவு பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை தனிப்பிரிவு பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அவ்வாறு நின்றுக்கொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து பொலிஸார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த வேளை காரில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, காரில் இருந்த மூவரையும் பொலிஸார் கைது செய்ததோடு , கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் என்பவற்றை பொலிஸார் மீட்டு அவர்களை மேலதிக விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.