தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமலும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டும் வரும் தமிழக அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின் போது 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சியில் ரூ. 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடியும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறாதது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறவோ அல்லது கர்நாடகாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவோ மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வஞ்சகப் போக்கைக் கண்டிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தாம் நேரடியாகத் தலைமை தாங்கவுள்ளதாகவும், சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

