ஹட்டன் , கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவே இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், முதலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொல்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த அனர்த்தம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


