கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென் லோரன்ஸ் நதி வழியே மனிதர்களைச் சட்டவிரோதமாகக் கடத்தியதில், ருமேனியக் குடும்பமும் படகோட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவர் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அக்வேசாஸ்னே (Akwesasne) மோஹாக் பிராந்தியத்தைச் சேர்ந்த கனடா – அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட ஸ்டாபனி ஸ்கொயர் (Stephanie Square – 53) என்ற பெண்ணே, கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
சட்டவிரோத ஊடுருவலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை, நிதி ஆதாயத்திற்காக மனிதர்களைக் கடத்தியமை மற்றும் உயிரிழப்புகளுக்குக் காரணமான கடத்தல் நடவடிக்கை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஸ்கொயர் ஒப்புக்கொண்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அன்று இரவு கனடாவின் கார்ன்வால் தீவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட படகு, கடுமையான வானிலையால் சென் லோரன்ஸ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ருமேனியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், படகைச் செலுத்திய கேசி ஓக்ஸ் (Casey Oakes) என்பவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அமெரிக்க நீதித் துறையின் கூற்றுப்படி, கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் அமெரிக்காவின் நியூயோர்க் மாநில எல்லைகள் சந்திக்கும் அக்வேசாஸ்னே பிராந்தியத்தில் இயங்கிவந்த மனிதக் கடத்தல் வலையமைப்பின் அமெரிக்கத் தலைவராகச் செயற்பட்டவராக ஸ்டாபனி ஸ்கொயர் அடையாளம் காணப்பட்டுள்ளார் இவருக்கான தண்டனை விபரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.




