அமெரிக்காவின் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான மற்றும் பலமான வாய்ப்பை, கனேடிய மாகாணங்களான அல்பெர்ட்டா (Alberta) மற்றும் சாஸ்காட்ச்செவன் (Saskatchewan) ஆகியவையே வழங்கி வருவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) தெரிவித்துள்ளார்.
அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் (Edmonton) நகரில் நடைபெற்ற பசிபிக் வடமேற்கு பொருளாதார பிராந்தியத்தின் (PNWER) வருடாந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த சில தசாப்தங்களாக தாம் அவதானித்ததில், உலக அளவில் எண்ணெய் பெறுவதற்கு மிகவும் உகந்த இடங்களில் ஒன்றாகக் கனடா
விளங்குகின்றது என, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் கூறினார்.
எதிர்வரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் தினசரி எண்ணெய் தேவையை மேலும் 30 லட்சம் முதல் 40 லட்சம் பேரல்கள் வரை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும், இதற்கு உதவக்கூடிய அல்பெர்ட்டா மாகாணம் ஏற்கனவே அமெரிக்காவின் ஒரு நம்பிக்கையான வணிகப் பங்காளியாக இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தபோது, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கூடுதல் எண்ணெய் விநியோகம் செய்வதற்கான ஆரம்பக்கட்ட முன்மொழிவை வழங்கியதாக, தூதுவர் ஹோக்ஸ்ட்ரா வெளிப்படுத்தினார்.
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தற்போதைய வர்த்தகச் சூழ்நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், முத்தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை (CUSMA) நீட்டிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே இறுதியாக ஒரு வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என, தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், கச்சா எண்ணெய் தவிர்த்து முக்கிய கனிம வளங்கள் (Critical Minerals) மற்றும் தேசிய பாதுகாப்புத் துறைகளிலும், கனடா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயற்படக் கூடிய பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) சுட்டிக்காட்டினார்.



