இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்தும், சிறைச்சாலைகளின்
கொள்ளளவை விரிவுபடுத்துவது மற்றும் மாற்றுப் பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் விஷேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாட்டின் தற்போதைய சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் கடுமையான இடநெரிசல் மற்றும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நிலையை சீரமைப்பதற்காகப் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள் இதன்போது, இலங்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றை விரிவாகப் பரிசீலித்த இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சிறைச்சாலைகளின் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பதற்கான மாற்று வழிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி,
இக்கலந்துரையாடலில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஆகில இலங்கை ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலைகளில் நபர் கொள்ளளவை விடப் பல மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல்லேகலை, பள்ளன்சேனை, மஹர, வட்டரக்க மற்றும் வெலிகடை முதலான சிறைச்சாலைகளில் புதிய கட்டடத்தொகுதிகள் மற்றும் தற்காலிகத் தடுப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் அதிபாதுகாப்புச் சிறை வசதியொன்று இயங்கி வருகின்றது.
சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுக்குச் சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக்காவல் (House arrest) முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் பிணைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இலங்கை அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது.



