மொன்றியலின் தென்கரை (South Shore) பிராந்தியத்தில் அமைந்துள்ள ‘ரூட் 132’ நெடுஞ்சாலையை முழுமையாகப் புனரமைத்து, அதனை நவீன நகரப் பூங்காவாக (Urban Boulevard) மாற்றியமைக்கும் பாரிய திட்டத்தை கியூபெக் மாகாண அரசு மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பல வருட காலக் காத்திருப்பு மற்றும் உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பிரத்தியேக ‘திட்ட அலுவலகம்’ (Project Office) அமைக்கப்படுவதாக மாகாண அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரேஷெட் (Christine Fréchette) செயின்ட்-கொன்ஸ்டன்ட் (Saint-Constant) நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
‘ரூட் 132’ நெடுஞ்சாலையின் செயின்ட்-கொன்ஸ்டன்ட் மற்றும் டெல்சன் (Delson) நகராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியே இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
தற்போது வெறும் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலைப் பகுதியை, பாதசாரிகளுக்கான நடைபாதைகள் (Sidewalks), மிதிவண்டிப் பாதைகள் (Bike paths) மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பிரத்தியேக வழிகள் (Lanes reserved for public transit) ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான நகரப் பூங்காவாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
