மனிதாபிமான அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் GIZ நிறுவனமும் இணைந்து 2024 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்குட்பட்ட 60 பெண்களை வலுப்படுத்தி தரமான கருவாடு உற்பத்தியூடான நிலையான வருமானத்தை ஈட்டுதல் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி ஊடக வீட்டு மின் பொருட்களை திருத்தம் செய்யும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் முதலான இலக்குகளைக் கொண்டு இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம், இன்று (07) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நிலையான வருமானங்களை ஈட்டி வரும் இப் பயனாளிகளுக்கான சான்றிதழ்களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வானது சிறப்புடன் நடந்தேறியுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்கள் பங்குபற்றியதுடன் பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் இத்திட்டத்தின் முன்னேற்றங்களை பாராட்டியதுடன் தொடர்ந்தும் மக்கள் தமது பொருளாதார நிலைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பயனாளிகள் தமது அனுபவப் பகிர்வின் மூலம் திட்டத்தின் அடைவுகளைம், மேம்பாடுகளையும், நிலைத்த வருமான வழிகளையும் முன் வைத்தமை நம்பிக்கையூட்டும் விடயங்களாக அமைந்தன.
மேலும் இந்நிகழ்வில் கைத்தொழில் அதிகார சபையின் இயக்குநர்,HDO நிறுவனத்தின் இயக்குனர், GIZ நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

