அல்பர்ட்டா மாகாணத்தின் மசகு எண்ணெயை, அமெரிக்க எல்லைகளுக்குள் கொண்டு செல்லாமல் நேரடியாகத் தெற்கு ஒன்ராறியோவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான 3,300 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட எண்ணெய் குழாய்த் திட்டத்தின் வரைபடப் பாதை வெளியிடப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) மற்றும் ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்டு (Doug Ford) ஆகியோர் இன்று, இதனை வெளியிட்டு வைத்தனர்.
கல்கரி நகரில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘நொர்தர்ன் ஷீல்ட்’ என்று அழைக்கப்படும் இந்தக் குழாய் வழித்தடம் தினசரி 5,000,000 பேரல் மசகு எண்ணெயைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
அத்துடன், எதிர்காலத்தில் அதனை 8,000,000 பேரல்களாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் ஹார்டிஸ்டி (Hardisty) பகுதியில் தொடங்கவுள்ள இந்த ‘நொர்தர்ன் ஷீல்ட்’ குழாய் வழித்தடம் ரெஜினா மற்றும் வின்னிபெக் நகரங்களுக்கு அருகே பயணித்து ஒன்ராறியோவின் சர்னியா (Sarnia) நகரை சென்றடையும்.
எனினும், இந்தத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் பழங்குடியின மக்கள் (Indigenous groups) ஆலோசனைகளில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, இத்திட்டக் கூட்டணியில் இணைய மேனிடோபா (Manitoba) மாகாண அரசு
அதிரடியாக மறுப்புத் தெரிவித்துள்ளமை பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எரிசக்தி வழித்தடம் ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன், மேனிடோபா மற்றும் ஒன்ராறியோ ஆகிய நான்கு மாகாணங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் மேனிடோபா அரசின் ஆதரவு இதற்கு மிக அவசியமாகும்.
எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பின் தரவுகளின்படி, ஒன்ராறியோ மாகாண சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தும் மசகு எண்ணெயில் 15 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
புதிய ‘நார்தர்ன் ஷீல்டு’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், முழுமையாகக் கனடா எல்லைக்குள்ளேயே பாதுகாப்பான உள்நாட்டு எரிசக்தி வளையத்தை உருவாக்க முடியும்.
மேலும், இந்த திட்டமானது மசகு எண்ணெயை எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வழிவகுக்கும் என்று, அல்பர்ட்டா முதலமைச்சர் டேனியல் ஸ்மித் சுட்டிக்காட்டியுள்ளார்.

