கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை அண்மையில் பெற்ற சிலரிடம் அவற்றை மீள ஒப்படைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது, குடியேற்ற சட்டத்தரணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), அண்மையில் வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்களை திரும்பப் பெறும் வகையில் கடிதங்களை அனுப்பியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடாத அந்தத் திணைக்களம், சில பேர் மட்டுமே இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை அரசு கையாண்ட விதம் மக்களிடையே குழப்பத்தையும், குடியுரிமை முறைமையின் மீதான நம்பிக்கையையும் பாதித்துள்ளதாக கனேடிய குடியேற்ற சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த டோம் மஹேர் என்பவரும் ஒருவர் கியூபெக்கைச் சேர்ந்த தனது முன்னோர்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து சான்றிதழைப் பெற்ற அவர், தற்போது அதை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


