முந்தைய அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உலகளாவிய பேரழிவாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் என்பவற்றை எமது நாட்டிற்கு எதிரான ஒரு பாரிய அச்சுறுத்தலாக நாம் அடையாளப்படுத்தியுள்ளோம்.
ஒரு சமூகமாக இந்த அழிவை நோக்கி நாம் இனிமேலும் ஒரு அங்குலம் கூட நகரக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எத்தகைய சவால்கள் வந்தாலும், இந்த பயணத்தை பின்னோக்கி மாற்ற நாம் தயாரில்லை.
கடந்த காலங்களில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல இது வெறும் மேடை நாடகமாக அமையாது.
இந்த மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் இந்த பேரழிவிலிருந்து மீட்பதற்கான யதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை நாம் தற்பொழுது முன்னெடுத்துள்ளோம். எனவும் அவர் குறிப்பிட்டார்.


