இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் தொல். திருமாவளவன் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றிவரும் பங்களிப்புகளுக்குச் சிவஞானம் சிறீதரன் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசும் மக்களும் வழங்கக்கூடிய அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அழுத்தங்களை முன்னெடுப்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், தேசிய இருப்பு மற்றும் இன நீதிக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் தொல். திருமாவளவன் திகழ்கிறார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்சினைக்கான ஆதரவை வலுப்படுத்தி, தமிழர்களின் தன்னாட்சி மற்றும் நீதிக்கான உரையாடல்களைப் பொதுத்தளத்தில் நிலைநிறுத்தி, தமிழ்நாடு – ஈழத் தமிழர் உறவின் அரசியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


