யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஜூன் 15ஆம் திகதி , அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


