மொன்றியல் (Montreal) நகரில் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய மொன்றியல் பொலிஸ் அதிகாரி, கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட கறுப்பின வாலிபர் நிக்கோலஸ் கிப்ஸ் (Nicholas Gibbs) சுட்டுக் கொல்லப்பட்டடிருந்தார்.
அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் ரீதியாகத் தான் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், அதே விவகாரத்தை மீண்டும் கிளறி ஒழுக்கநெறி தீர்ப்பாயம் மூலம் தன் மீது விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என, அந்த பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் (Dominique Proulx), தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் உயர் நீதிமன்றத்தில் (Quebec Superior Court) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தன் மீது ஒழுக்கநெறி தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் (Quash the citations) என பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் கோரியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மாகாணத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் சுயாதீன புலனாய்வுப் பிரிவு ஆகியவை முறையான விசாரணை நடத்தி குற்றச்சாட்டு எதுவுமில்லை என முடிவெடுத்த பின்னர், ஒழுக்கநெறி ஆணையம் அதே காரணங்களை முன்வைத்துத் தண்டிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்ற வாதத்தை அவர், தன் கோரிக்கையூடாக முன்வைத்துள்ளார்.
உயிரிழந்த கறுப்பின வாலிபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 2021 ஆம் ஆண்டு ஒழுக்கநெறி ஆணையாளர் இதுகுறித்த விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


