கடந்த காலத்தில் ‘காட்டுச் சட்டத்தை’ கையில் எடுத்து ஓட்டமாவடியில் காளி கோயிலை இடித்து மீன் சந்தை கட்டிடம் கட்டி சட்டங்களை மதிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா இன்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுவை தாக்க முற்பட்டதை ஈ.பி.டி.பி கட்சி மட்டு ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அரவது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்ட சம்பவத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து, அதன் மூலம் அரசியல் குளிர் காய்ந்து வந்தவரஏ.எல்.எம். ஹிஸ்புல்லா. அவர் மீண்டும் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் களுக்கு இடையே இன முரண்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் கொண்ட ஒருவராக இருந்து கொண்டு, சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்க முற்பட்டது கந்தசாமி பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே காரணமாக அமைந்துள்ளது. தனது இந்த அநாகரீகமான மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு முரணான செயலுக்காக ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலமான ஓட்டமாவடி காளி கோவிலை இடித்து, அவ்விடத்தில் மீன் சந்தை அமைத்து தனது தேர்தல் மேடைகளில் பெருமையாகப் பேசியவர் ஹிஸ்புல்லா. சட்டங்களை மதிக்காது ‘காட்டுச் சட்டத்தை’ கையில் எடுத்த இவருக்கு, இன்று சட்டங்களைப் பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தார்மீகத் தகுதியும் கிடையாது.
ஹிஸ்புல்லாவுக்கு தீவிரவாத அமைப்புகளுடனும், சஹரானுடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த காலத்தில் பகிரங்கமாக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
ரிதிதென்னை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு சொந்தமான பல ஏக்கர் பூர்வீக காணிகளை தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கையகப்படுத்தியுள்ளார்.
இந்த காணி அபகரிப்புகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு, துரித விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
