முள்ளிக்குளம் காற்றாலை மின் விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய அங்கமான தொகுதி A இன் கட்டுமான ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி அளித்துள்ளது.மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிராந்தியங்கள் இலங்கையின் மிகச் சிறந்த காற்றாலை மின் உற்பத்தித் திறனைக் கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இப் பிராந்தியங்களில் தனியார் மற்றும் அரச கூட்டுறவோடு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, பாதுகாப்பான முறையில் தேசிய மின் கட்டமைப்பிற்குள் கொண்டு சேர்ப்பதற்கான விநியோக மார்க்கமாகவே, இந்த முள்ளிக்குளம் காற்றாலை மின் விநியோகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் நடைமுறைகளின் கீழ் கோரப்பட்ட இந்த ஒப்பந்தம், தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீடுகளுக்குப் பின்னர் மிகக் குறைந்த விலைப் புள்ளியை முன்வைத்த இந்திய நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மின்சக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு 6.045 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த திட்ட மதிப்பிற்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில், இத்திட்டம் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
