வவுனியா மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் அவரிடம் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வரின் செயற்பாடுகளுக்கான தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மாநகர சபையின் முதல்வர் சார்பில் நானும் பிரதி முதல்வர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் உயர்நீதிமன்றத்தில் குறித்த தடைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தோம்.
இன்று உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் முதல்வர் தலைமையிலான மாநகர சபை இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கி இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை முதல்வர் தலைமையில் சபை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதி முதல்வர் தொடர்பான இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் பிரதி முதல்வர் ராஜினாமா கடிதத்தை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்வதற்கான அனுமதியும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 19ஆம் திகதி மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
