கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள அபிரிபி-தெமிசுகாமிங் (Abitibi- Témiscamingue) பிராந்தியத்தின் போரியல் காடுகளில், முன்னெடுக்கப்படவுள்ள தங்கச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக, அங்குள்ள அனிஷ்னாபே (Anishinaabe) பழங்குடியின மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முறையான கலந்தாலோசனைகள் இன்றி தங்களின் பூர்வீக நிலத்தில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கியூபெக்கின் லக்-சைமன் (Lac-Simon) அனிஷ்னாபே பழங்குடியின சமூகத்தின் பூர்வீக நிலப்பரப்பிலிருந்து வெறும் 8 கிலோமீட்டர் தொலைவில், பல படுகுழிகளைக் கொண்ட (Multi-pit) பிரம்மாண்ட திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மெக்சிகோவைச் சேர்ந்த சுரங்கத்துறை மாபெரும் நிறுவனமான பிரெஸ்னிலோ (Fresnillo), இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளை (Exploratory work) உடனடியாக நிறுத்திவிட்டு, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறுமாறு பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தப் பழங்குடியின மக்கள் குறித்த சுரங்கப் பகுதிக்கு நேரடியாகச் சென்று உத்தியோகபூர்வ அறிவித்தல் (Cease Operations Notice) ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
மேலும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பழங்குடியினத் தலைவர் லூசியன் வபனோனிக் (Lucien Wabanonik) தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அங்கு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


