மொன்றியல் (Montreal) மாநகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான கட்டட வாடகை உயர்வினால் அதன் அடையாளமாகத் திகழும் சுயாதீன இசைத்துறை (Independent Music Scene) நலிவடைந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
பல தசாப்தங்களாக மலிவான வாடகை மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக உலகெங்கிலுமிருந்து கலைஞர்களை ஈர்த்த இந்த மொன்றியல் நகரம், இன்று வணிகமயமாதல் மற்றும் நில உரிமையாளர்களின் அதீத வாடகை நெருக்கடியால் அதன் கலைத்துவத்தை இழந்து வருவதாக இசைக்கலைஞர்கள் மற்றும் கலை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மொன்றியலின் புகழ்பெற்ற இசை மற்றும் இரவுநேரக் கலைக் கலாசாரத்தின் அடித்தளமாக விளங்கும் சிறிய ரக இசைக்கூடங்கள், ஒத்திகைக்கூடங்கள் (Rehearsal Spaces) மற்றும் சுயாதீனக் கலை அரங்குகள் தங்களின் மாதாந்த வாடகையைச் செலுத்த முடியாமல் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக நகரில் ஏற்பட்டுள்ள அசுர வேக வீட்டுவசதி மற்றும் வணிக இடங்களுக்கான வாடகை உயர்வு, வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் இசைக்குழுக்கள் (Local Bands) நகரை விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கியுள்ளது.
யுனெஸ்கோவினால் (UNESCO) ‘வடிவமைப்புக்கான நகரம்’ என அங்கீகரிக்கப்பட்ட மொன்றியலின் கலாசாரப் பொருளாதாரத்திற்கு, இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
