கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) நகரில் அண்மையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் (Asylum seekers) புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக நடத்தப்பட்ட தீவிர இனவெறிப் பேரணி ஆனது, மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொன்றியலுக்கு (Montreal) வடகிழக்கே அமைந்துள்ள ஷாவினிகன் நகரில் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றிற்குச் சொந்தமான முன்னாள் தங்குமிடம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கியூபெக்கின் தீவிர வலதுசாரி அமைப்பான ‘அட்லாண்டே’ (Atalante) மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேவாலய வளாகத்தின் முன்னால் திரண்டு இந்த இனவெறிப் பேரணியை முன்னெடுத்தனர்.
பேரணியின் போது, புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், கியூபெக்கின் கலாசாரப் பாதுகாப்பை வலியுறுத்தியும் தீவிரவாதத் தொனி கொண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கியூபெக் (Quebec) மாகாணத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இந்த “வெறுப்புப் பிரசாரத்திற்கு” தங்களின் கடுமையான கண்டனங்களை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
கியூபெக் மாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் போக்குகளின் வெளிப்பாடாகவே, இந்தச் சம்பவம் நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
