ரொறன்ரோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள பில்லி பிஷப் தீவு விமான நிலையத்தை (Billy Bishop Toronto City Airport) விரிவாக்கம் செய்து, அங்கு பெரிய ரக ஜெட் விமானங்களை (Jets) இயக்குவதன் மூலம், 2050 ஆம் ஆண்டளவில் மாகாணத்திற்கு ஆண்டுதோறும் 8.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார லாபம் கிடைக்கும் என்ற ஒன்ராறியோ அரசாங்கத்தின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசும், இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் ரொறன்ரோ துறைமுக அதிகாரச் சபையும் (PortsToronto) இந்த பிரம்மாண்டமான நிதிசார் கணிப்பீட்டை வெளியிட்டன.
அறிவிப்பு வெளிவந்து பல வாரங்கள் கடந்த போதிலும், அதற்கான எவ்வித முறையான ஆதாரங்களோ அல்லது புள்ளிவிவரக் கணக்கீடுகளோ இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் பொருளாதார மற்றும் வான்வழிப் போக்குவரத்து நிபுணர்கள் இந்த அறிவிப்பைக் கடுமையான சந்தேகத்துடன் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் புகழ்பெற்ற வாட்டர்ஃபிரண்ட் (Waterfront) கடற்கரை பிராந்தியத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடிய இந்தத் திட்டம், ஒன்ராறியோ மாகாண அரசுக்கும் மாநகர சபைக்கும் இடையிலான ஒரு பெரும் அரசியல் அதிகாரப் போராட்டமாக மாறியுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையம் அமைந்துள்ள நிலத்தின் 20 சதவீதப் பகுதி ரொறன்ரோ மாநகர சபைக்குச் சொந்தமானதாகும்.
இந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அத்துடன், சர்ச்சைக்கரிய பில் 5 இடத்தை ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது விசேட பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) மாற்றவும் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம், மாநகர சபையின் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறி மாகாண அமைச்சரவையே இங்கு நேரடியாக முடிவுகளை எடுக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
