சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம், இலங்கை போக்குவரத்து சபை சாதனை அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.
சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம், கடந்த 6 நாட்களில் மாத்திரம் ஒரு பில்லியன் (1000 மில்லியன்) ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அன்று ஒரு நாளில் மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன, பயணிகளின் நலன் கருதி மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தியதன் மூலமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக இன்றும் (15) விசேட பேருந்து சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
