நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், தனிப்பட்ட அரசியல் இலாபங்களை விடுத்து “தேசிய ஒற்றுமைக்காக” ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி அறைகூவல் விடுத்துள்ளார்.
மொன்றியலில் நடைபெற்ற லிபரல் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய அவர், நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் வர்த்தகப் போர்களும் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்து வரும் சூழலில், கனடா ஒரு ‘சுயசார்பு’ கொண்ட நாடாக மாற வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தினார்.
இனிவரும் காலங்களில் கனடிய இராணுவத்திற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டொலரும் கனடியத் தொழிலாளர்களுக்கும், கனடிய நிறுவனங்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதேவேளை, லிபரல் கட்சிக்குள் வெவ்வேறு கருத்துடையவர்கள் இணைந்தாலும், பெண்களின் கருக்கலைப்பு உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் போன்ற லிபரல் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என பிரதமர் மார்க் கார்னி தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
