பொத்துவில் கனகர் கிராமம் கடந்த 1990 ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 210 குடும்பங்களின் காணிகளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து 202 ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தது. இக் காணி கடந்த 2019 ஆம் ஆண்டு 73 குடும்பங்களுக்கு ஒருவருக்கு ஒரு ஏக்கர் இருபது பேஜ் என்ற அடிப்படையில் அரசாங்கம் வழங்கி வைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து முதற் கட்டமாக அங்கு வாழ்ந்து வந்த 73 குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்கான ஐந்து வீடுகளை அமைப்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்று அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட குடும்பத்திற்கான 550 சதுர அடியைக் கொண்ட வீடொன்றை அமைப்பதற்கு அரசின் உத்தேச மதிப்பீடாக ரூபா 18 இலட்சத்து 25 ஆயிரமாகும்.
இதற்கு ரூபா 15 இலட்சமும் அதற்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களின் 340 சதுர அடியைத் கொண்ட வீடொன்றை அமைப்பதற்கான அரசின் உத்தேச மதிப்பீடு ரூபா 25 இலட்சத்து 45 ஆயிரமாகும். அதற்கு ஒன்பது இலட்சமும் அரசாங்கத்தினால் வீடு அமைப்பதற்கான நிதி வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் அரசாங்கம் வழங்கிய நிதியோடு மீதியை புலம்பெயர்ந்தோர் அமைப்பாகிய கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றத்தினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலண்டனில் வசித்த அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரனின் நினைவாக 5 வீடுகளையும் அமைப்பதற்கான அரைவாசி நிதியினை வழங்கி முதற்கட்டமாக நிர்மாணித்திருந்தனர்.
இவ்வாறு நிர்மாணிக்ப்பட்ட 5 வீடுகளும் பயனாளிகளுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் குறித்த நிதியை வழங்கி இந்த வீடுகளை அமைப்பதற்கு பங்களிப்பு செய்த புலம்பெயர்ந்தோர் குமுகாய அமைப்பின் சார்பாக கலந்துகொண்ட மறைந்த டொக்டர் சதாசிவம் மகேஸ்வரனின் சகோதரர் சதாசிவம் மங்களேஸ்வரனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் அவர்களினால் பாராட்டு தெரிவித்து நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நு. சிரிநாத் மற்றும் ஞான முத்து சிரிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் நிதி வழங்கிய புலம் பெயர்ந்தோர் அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட சதாசிவம் மங்களேஸ்வரன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் என கிராம மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் முதலில் கிராமத்திற்கு செல்லும் வீதியினை பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் திறந்து வைத்தார் 5 வீடுகளையும் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்த நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர்.
