கியூபெக் மாகாணத்தின் கலாசார அடையாளமான பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் என்றாலும், அது ஆங்கிலம் பேசும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது என மொன்றியல் நகரத்தின் முன்னாள் மேயர் வலேரி பிளான்ட் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் ‘Bill 96’ மொழிச் சட்டத்தின் கீழ், மொன்றியல் மாநகர சபையின் பெரும்பாலான சேவைகள் மற்றும் தொடர்பாடல்கள் பிரெஞ்சு மொழியிலேயே அமைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மொன்றியலில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் சமூகத்தினர் தங்களுக்குரிய சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் மேயர் வலேரி பிளான்ட், ”வட அமெரிக்காவின் மிக முக்கியமான பிரெஞ்சு மொழி நகரமாக மொன்றியலைப் பேணுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” – ” பிரெஞ்சு மொழியை ஊக்குவிக்கும் அதேவேளை, ஆங்கிலம் பேசும் மக்களைப் புறக்கணிப்பது அல்லது அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணரச் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” எனத் தெரிவித்துள்ளார்.
மொழிச் சட்டங்களை அமுல்படுத்தும்போது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் புதிய குடியேறிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு மனிதாபிமானத்துடனும் பொது அறிவோடும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
