மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த நிலையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து மட்டு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் முகத்துவாரம் நாவலடி பகுதியைச் சோந்த 37 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு முகத்துவாரம் நாவலடியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் வெளிநாடு அனுப்புவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த நபர் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் 3 வருடங்களாக தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக 9 திறந்த நீதிமன்ற பிடியாணையும் 4 பிடியாணையுமாக 13 பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து தொடர்பான பொறுப்பதிகாரியான பொலிஸ் சாஜன் கோகுலன் கிடைத்த தகவலுக்கு அமைய அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் திருகோணமலை சேருநுவர பகுதியில் தலைமறைவாகியிருந்த குறித்த நபரின் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.
இதில் கைதானவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை அவருக்கு எதிராக 26 வழக்குகள் உள்ளதாகவும் ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு அவருக்கு பிணைக்கு கையெழுத்திட்டவர்கள் தற்போது அதில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
