மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து சென்ற கனரக வாகனத்தை நிறுத்தாது தப்பி ஓடிய வாகனத்தை துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடாத்தி மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை(05) இருவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி சம்பவ தினமான இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் ஒன்றை, கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிசார் பணித்தனர்.
இதன் போது அதனை மீறி கனரக வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து, அவர்களை பின் தொடர்ந்து பொலிசார் துரத்தி சென்ற நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியதையடுத்து அதனை துரத்தி சென்ற நிலையில் குறித்த வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தது.
இதனையடுத்து பொலிசார் குறித்த வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியபடுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனை தடையை அமைத்து அதனை நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
இதன் போது அந்த தடையை மீறி கனரக வாகனம் மட்டுநகர் நோக்கி தப்பி ஓடிய நிலையில், அந்த வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி கை துப்பாக்கியால் இரண்டு துப்பாகி பிரயோகம் மேற்கொண்டார்.
இதையும் மீறி குறித்த வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டு தலைமையக பொலிசார் நகரின் திருகோணமலை வீதி வை’ சந்தி பகுதியில் வீதி சோதனை அமைத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளையும், 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹேரோயின் போதை பொருளை மீட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தலைமறைவாகி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
