மத்திய கிழக்குப் போர்ச்சூழல் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2 கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே, அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் மோதல் நிலைமைகளால் அந்த பிராந்தியங்களில் பாதுகாப்பு ஸ்திரமின்மைக்கு
வழிவகுத்துள்ளதோடு, இன்று உலகளாவிய ரீதியாக ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரிவோர், விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல், சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வர்த்தகம், நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள ஆயத்த மற்றும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே, தாம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
”மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்து வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

