கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார காணிகளை ஆவணங்கள் இல்லை எனக் காரணம் காட்டி விடுவிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மாவட்டச் செயலகம் பரிந்துரைக்கும் காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டம் கடற்றொழில் மற்றும் கடல்வள அமைச்சர் இ. சந்திரசேகர் தலைமையிலும் ஆளுநரின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது. மணல் விநியோகம், அபிவிருத்தித் திட்டங்கள், வீதி மற்றும் பாலம் புனரமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன.
வனவளத் திணைக்களத்திடம் கோரப்பட்ட 10,821 ஏக்கரில் 1,088 ஏக்கர் மட்டுமே விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முழுமையான காணி விடுவிப்பை ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக கோரியுள்ளது.
இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீர் பெற்றுக்கொள்வதற்கும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
