கியூபெக் மாகாணத்தின் வன மேலாண்மை மற்றும் மரம் வெட்டும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில், மாகாண அரசு ஒரு “சிறிய அளவிலான சீர்திருத்தத்தை” (Mini-reform) அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தச் சீர்திருத்தமானது காடுகளைப் பாதுகாப்பதற்கோ அல்லது பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்வதற்கோ உதவாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் மைட்டே பிளான்செட் வேசினா (Maïté Blanchette Vézina) தாக்கல் செய்துள்ள இந்த புதிய சட்டத்திருத்தத்தில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சிறு காடு வளர்ப்பாளர்கள் மற்றும் பிராந்திய வனக் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகச் சுமையைக் குறைத்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துதலுக்கு இந்த புதிய சட்டத்திருத்தம் இடமளிக்கின்றது.
இதேவேளை, தங்கள் பூர்வீக நிலங்களில் மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்கு முன், தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை இந்தச் சீர்திருத்தம் புறக்கணித்துள்ளதாக பழங்குடியினத் தலைவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கிரீன்பீஸ் (Greenpeace) போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள், இந்தக் காடுகளில் வாழும் அரியவகை மான்களின் பாதுகாப்பிற்கு இந்தச் சட்டத்திருத்தம் எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளன.
