பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றையதினம் இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் இடம்பெற்று வருகின்றது.
இப்போட்டியை பார்ப்பதற்காக பலர் வருகை தந்தநிலையில் வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்தார்.
தற்காலிக ஊழியர் ஒருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானப் பணிகளுக்காக வந்திருந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் பணிக்காகக் கண்டியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். எனினும், அவர் இன்றைய தினம் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி, திகன – ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.
கைதான இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காகப் பல்லேகலை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
