எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (11) காலை 11 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் சிவசம்பு ராமகிருஷ்ணன் கலந்து கொண்டதோடு எதிர்வரும் மகா சிவராத்திரி விழாவிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம், மின்சாரம், நீர் விநியோகம், உணவு, பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளடங்களாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.