காத்தான்குடியில் உள்ள மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை செயலிழக்க வைத்து அதனை ஹோட்டலாகியது போல கல்லாற்றில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் செயலிழந்து கிடப்பதை போல இயங்கிவரும் களுவங்கேணி மண்ணெண்னை எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் செயலிழக்க வைத்து மூடவைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா முயற்சியை செய்து வருகின்றனர் என ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்காக 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டது இதில் 7 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டது அதன் பொருட்கள் திருடப்பட்டு செயலிழந்து மீண்டும் உருவாக்க முடியாத நிலையில் கிடக்கின்றது.
இந்த நிலையில் களுவங்கேணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் இருப்பதை அறிந்து நான் 30 இலச்சத்துக்கு மேற்பட்ட பணத்தை செலவு செய்து மீனவர் சங்கத்திடம் இருந்து 5 வருட குத்தகைக்கு பெற்று அந்த எரிபொருள் நிலையத்தை மீள் இயக்கத்துக்கு கொண்டுவந்து இயக்கி வருகின்றேன்.
நான்கு ஆண்டுகள் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நான் செயற்படுத்தி வந்தேன் இந்த நிலையில் இரா.சாணக்கியன் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவரது பினாமிகளுக்கு எடுத்துக் கொடுக்கும் முயற்சியை கடந்த 2025 ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொய் தகவல்களை கொடுத்து அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளபார்க்கின்றார். அதேவேளை அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் முயலை கொண்டு சென்று அதற்கு 3 கால் என்று சொன்னால் அங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் 3 கால் என தெரிவிக்க கூடாது அதனை விசாரணை செய்ய வேண்டும் .
இயங்கிவரும் களுவங்கேணி மண்ணெண்ணையை எரிபொருள் நிரப்பு நிலையத்தை இரா.சாணக்கியன் தனது அதிகாரத்தை வைத்து அப்போதைய கடற்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளரான குரூஸ் உடந்தையாக செயற்பட்டு கடந்த வருடம் 7ம் மாதம் மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்தார்.;
அது மட்டுமல்ல அவர் தொடர்ச்சியாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தவறான தகவல்களை வழங்கி வந்தார் இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் உட்பட்டவர்களுக்கு அறிவித்தேன் அவர்கள் அது தொடர்பாக எல்லா ஆவணங்களை பார்வையிட்டு மீண்டும் ஒரு வருடத்துக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயக்குமாறு கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் ஜெனரல் கடித மூலம் எனக்கு அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் எதிர் வரும் மே மாதம் 10 ம் திகதிவரை செயல்படுத்த அனுமதியளித்துள்ள நிலையில் எனது உடன்படிக்கை முடிவடைய முன்னர் சாணக்கியன் அவரது பினாமிக்கு எடுத்து கொடுப்பதற்காக தொடர்ச்சியாக என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எனது மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்துள்ளார் கள்.
அதை தெளிவுபடுத்த அரசாங்க அதிபரிடம் சென்று ஆவணங்களுடன் தெரிவித்தபோது அவர் தெரிவித்தார் அது கடற்றொழில் பணிப்பாளர் எடுக்க வேண்டிய முடிவில் தான் தங்கியுள்ளது எனக்கு ஆவணங்களை பார்க்க வேண்டிய தேவை இல்லை என அவர் எனக்கு பதில் தந்தார். எனவே சாணக்கியன் தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி வந்தால் அது தொடர்பாக உண்மை தன்மையை ஆராய வேண்டியது அரசாங்க அதிபரின் கடமை ஆனால் அவர் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறியது கவலையான விடயம்.
பாராளுமன்ற உறுப்பினர் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்றால் அரசாங்க அதிபர் நம்பக் கூடாது என்பதை உணர்ந்து 3 காலா 4 காலா என விசாரணை செய்து பார்க்க வேண்டும் அதனை அரசாங்க அதிபர் செய்யவில்லை
இந்த நிலையில் எனது மண்ணெண்னை விநியோகத்தை துண்டித்தது மட்டுமல்ல என் மீது பொய் குற்றச்சாட்டு சுத்தி வந்து கொண்டிருக்கிறார். எனவே எனக்கு குத்தகை ஒப்பந்தம் எதிர்வரும் மே 10 ம் திகதி முடிவுறுகிறது அதன் பின்னர் சாணக்கியன் தான் நினைத்த மாதிரி அவரது பினாமிக்கு கொடுக்க முடியாது இது அரசாங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் இது பகிரங்க ஏலத்தில் விடப்பட்ட வேண்டும்.
