இலங்கை கிரிக்கெட் அணியில் சனத் ஜெயசூரியா பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக, நியமிக்கப்பட்டுள்ளார். 2026 T20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றால், வேகப்பந்துவீச்சுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 25 2026 வரை ஒரு மாத காலத்திற்கு, ஆலோசக வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடர், பெப்ரவரி 7ம் திததி தொடங்கவுள்ளது.
2020ம் ஆண்டு லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026க்காக இலங்கையின் தேசிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மலிங்கா பயிற்சி அளிப்பார். மலிங்காவின் சர்வதேச அனுபவத்தையும், குறிப்பாக இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டெத் பவுலிங்கில் அவரது யுத்தியையும் பயன்படுத்தி, வரவிருக்கும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பைக்கு முன், இலங்கை அணி பாகிஸ்தானுடன் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தங்கள் அணியைப் பெயரிட்டுள்ளது, ஆனால் இலங்கை இன்னும் அதை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த T20 உலகக் கோப்பையில் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில், இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியினர் எதிர்பார்த்துள்ளனர்.
வரவிருக்கும் T20 உலகக் கோப்பையில், இலங்கை அணி B பிரிவில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மேலும், பெப்ரவரி 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தனது உலகக் கோப்பை முதல் போட்டியை ஆரம்பிக்கின்றது.


