வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி இன்றையதினம் பொதுமக்களால் ஆர்பாட்டபேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கங்கன்குளம் பகுதியில் ஆரம்பித்த போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேசசெயலகம் வரை பேரணியாக சென்று அங்கு ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல் அகழ்விற்கான அனுமதியை வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் சுற்றுச்சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இயற்கையை அழிக்காதீர்கள், சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள், எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு மாத்திரமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

