தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தின் போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர்.
மதகுருவான வேலன் சுவாமியை மிலேச்சத்தானமாக தாக்கி, அவரை காட்டுமிராண்டி தனமாக இழுத்து சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனையும் தள்ளி விழுத்தியுள்ளனர். அத்துடன் , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்து சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர்.
இந்த பொலிசாரின் அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது.
பொலிசாரின் இந்த செயற்பாடானது நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளமையையே காட்டி நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் , சிங்கள பௌத்த தீவிரவாத போக்கில் மாற்றம் ஏற்பட போவதில்லை.
திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பிலான பிரச்சனையின் போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காது அமைதி காத்தனர்.
ஆனால் வேலன் சுவாமிகளை மிலேச்சத்தானமாக தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமி ஒரு பௌத்த பிக்குவாக இல்லாதமை தான் இதற்கு காரணம். வேலன் சுவாமிகளுடன் நடந்து கொண்டது போன்று , ஒரு பௌத்த பிக்குவுடன் பொலிஸாரினால் நடந்து கொள்ள முடியுமா ?? என கேள்வி எழுப்பியுள்ளார்.


