கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவராகப் பொறுப்பேற்ற ஆறே மாதங்களில், பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez) தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தலைமைப் போட்டியில் நடந்ததாகக் கூறப்படும் பணப்பட்டுவாடா மற்றும் சட்டவிரோத நிதி திரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று அவர் முறைப்படி தனது விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான ரோட்ரிக்ஸ், கடந்த ஜூன் மாதம் தான்
இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், கடந்த ஒரு மாதமாக அவர் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான புகார்கள் மற்றும் காவல்துறையின் குற்றவியல் விசாரணை காரணமாக, அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் கட்சிக்குள்ளேயே அதிகரித்தது.
ரோட்ரிக்ஸின் தலைமைப் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது பல விதிமீறல்கள் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. தம்மால் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டில் நிகழவுள்ள தேர்தலுக்கு முன் கட்சி ஒருமித்த கருத்துடன் செயல்படுவதற்கு, தான் விலகுவதே சிறந்தது என்றும் ரோட்ரிக்ஸ் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


