கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு குளத்தின் கலிங்கு நீர் வெளியேறி செல்லும் நீரேந்து பிரதேசத்தில் உள்ள கொழுந்துப்புலவு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பண்ணையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத குளம் காரணமாக மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த குளம் அமைக்கப்பட்ட பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு சென்றனர்.
குறித்த கலிங்கு நீர் செல்லும் பகுதியில் குளம் அமைக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்ற விவசாய நடவடிக்கை காரணமாக பல பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உற்படுகின்ற நிலையில் சரியான ஒரு பொறிமுறையினை உருவாக்கும் நோக்கில் நீர்ப்பாசன திணைக்களத்திடம் தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.


