நிகழ்வுகளுக்கான கட்டணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இணையதள வியாபாரிகளைத் தடுப்பதற்கும், இணையவழி சந்தாக்களை இரத்து செய்வதற்கான சிக்கலான நடைமுறைகளை இலகுபடுத்துவதற்குமென, கியூபெக் மாகாண அரசாங்கம் புதிய, கடுமையான சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது.
இந்த புதிய சட்ட மசோதாவை கியூபெக் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நீதித்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette), கட்டணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்களை “கியூபெக் கலாச்சாரத்தின் ஒட்டுண்ணிகள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
கலைஞர்களின் உழைப்பினை உறிஞ்சி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் இந்த நடைமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சட்டம் அமுற்படுத்தப்படுமிடத்து கியூபெக் மாகாணத்தில் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது கலாசார நிகழ்வுகள் போன்றவற்றுக்கான கட்டணச்சீட்டுகளை, அதிகாரப்பூர்வ விற்பனையாளர் நிர்ணயித்த உண்மையான விலைக்கு மேல் மறுவிற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படவுள்ளது.
மேலும், இந்த சட்டமசோதா குறிப்பிடும் புதிய விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, 1,75,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
