மேல் மாகாணத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்ற அனர்த்த நிலைமையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 7,989 இராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்வதற்கும் முப்படைகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி, நாடு முழுவதும் 24,156 பாதுகாப்பு வீரர்கள் 2,453 பேரின் உயிர்களைக் காப்பாற்றி 5,400 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 488 பாதுகாப்பு மையங்களில் உள்ள 43,925 பேருக்கு உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் பதுளை, பல்லேகலே, திகன, மருதானை, களனிமுல்ல மற்றும் மட்டக்குளிய ஆகிய இடங்களில் இராணுவம் 08 உணவு தயாரிப்பு தளங்களை நிறுவியுள்ளதுடன். அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு முகாமிலும் இடம்பெயர்ந்தவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் 80 பேர் கொண்ட குழுவுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தததுடன், தற்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தின் இரண்டு விமானங்கள் கம்பஹா மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் அனர்த்த நிலைமையைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மேலும் தெரிவித்துள்ளார்
