கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலை 401-ல் எதிர்த்திசையில் வாகனம் வந்ததால் ஏற்பட்ட விபத்தில், குடும்ப உறுப்பினர்கள் மூவரை இழந்தவர்கள்,
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் டர்ஹாம் மண்டல நிர்வாகக் குழு மீது 25 மில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல்
செய்துள்ளனர்.
இந்த விபத்தில் ஓட்டுநராக இருந்து விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரின் சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விபத்து, கனடாவைப் பார்க்க வந்திருந்த மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் கோகுல்நாத் மற்றும் அக்குழந்தையின் பாட்டனார் மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை , பாட்டி மகாலட்சுமி அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் உயிரைப் பறித்தது. இந்த விபத்திலிருந்து தப்பிய குழந்தையின் பெற்றோர், கோகுல்நாத் மணிவண்ணன் மற்றும் அஸ்விதா ஜவஹர் ஆகியோர் வழக்குத் தொடுக்கும் நபர்களில் உள்ளடங்குவர்.
நெடுஞ்சாலையில் எதிர்த்திசையில் சென்ற ஒரு வேனை காவல்துறை அதிகாரிகள் துரத்தியமை ஓர் அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற செயல்
என வழக்கு மனு குறிப்பிடுகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பெற்றோர், நிரந்தரமான கடுமையான காயங்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவச் செலவுகள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
