காத்தான்குடியில் 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பெண் போதை பொருள் வியாபாரியை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து காத்தான்குடி 6ம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22ம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
அவரை கைது செய்து விசாரணையை அடுத்து அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேரை ஜஸ் போதை பொருளுடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரை அவர் இருந்த பொலிசார் கைது செய்யவில்லை என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் குறித்த பெண் வியாபாரியை இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 5 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
