விசேட தேவையுடைய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்குச் சேர்ப்பதற்கான கொள்கை வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித் தொடர்பான துணைக்குழு மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையேயான கலந்துரையாடலின் போதே ஆணைக்குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிவாரி பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கு தொழிற்சந்தையில் உரிய இடம் கிடைக்கச் செய்தல், வெளிவாரி பட்டங்களின் தரம் மற்றும் அவற்றில் நிலையை தரமான முறையில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தேசிய மட்டத்தில் வெற்றிகளை பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவதற்கான திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
