தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பாரிய பள்ளத்தாக்கு காரணமாக, அப்பகுதியில் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
வெஜிரா மருத்துவமனைக்கு முன்பாக 900 சதுர மீற்றருக்கு பாரிய பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளின் படி, குறித்த பகுதியில் கழிவுநீர் குழாய் வெடித்ததன் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக பேங்கொக் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிலத்துக்கு அடியில் தொடருந்து மார்க்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இச்சம்பவத்தில் உயிரிழப்புக்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
குறித்த பகுதி இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
