தலிபான் அரசு ஒரு புதிய தடையை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களில் பெண்களால் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியமைத்தனர். அப்போதிலிருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி பெண்கள் வெளியே செல்லத் தடை, கல்வி கற்க, பணிபுரிய என பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்த நிலையில், பெண்களால் எழுதப்பட்ட பெண்ணுரிமை, பாலினம் குறித்த புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானிலுள்ள புதிய கல்விச் சட்டத்தின்படி, தலிபான்களின் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக குறித்த புத்தகங்கள் இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள் உட்பட 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்கலைக்கழக பாடப்பிரிவுகளில் உள்ள 18 பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. பாலின மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்டவை இந்த நீக்கப்பட்ட பாடங்களில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
