ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாகநேற்று அறிவித்தது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ட்ராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி ட்ராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘ராகுல் ட்ராவிட் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. வீரராக, தலைவராக, பயிற்சியாளராக அவர் எங்களது அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.
2026 ஐபிஎல் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
ராகுல் பல ஆண்டுகளாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர். அவரது தலைமைத்துவம், ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்கி, அணியில் தனக்கு என ஒரு முத்திரையைப் பதித்துள்ளது.
ராகுலுக்கு அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ராஜஸ்தான் றோயல்ஸ், அதன் வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், ராகுலின் அற்புதமான சேவைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர்,’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
